நிர்பயா கொலை குற்றவாளிகள் டெல்லி கோர்ட்டில் மனு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு


நிர்பயா கொலை குற்றவாளிகள் டெல்லி கோர்ட்டில் மனு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 18 March 2020 9:01 PM GMT (Updated: 18 March 2020 9:01 PM GMT)

தூக்கு தண்டனையை எதிர்த்து நிர்பயா கொலை குற்றவாளிகள் டெல்லி கோர்ட்டில் செய்த மனு தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங் (வயது 32), அக்‌ஷய்குமார் சிங் (31), வினய் சர்மா (26), பவன் குப்தா (25) ஆகியோரை நாளை (வெள்ளிக்கிழமை) தூக்கிலிட டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், குற்றவாளிகளின் வக்கீல் ஏ.பி.சிங் நேற்று டெல்லி செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், குற்றவாளிகள் சட்டரீதியாக உள்ள சலுகைகளை இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. மேலும், தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் குற்றவாளிகளை தூக்கிலிட இது சரியான சந்தர்ப்பமில்லை. எனவே 4 பேரையும் நாளை தூக்கில் போட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி சிறைத்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். மேலும், இந்த மனு இன்று (வியாழக்கிழமை) மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி கூறினார்.


Next Story