மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 7 April 2020 6:08 AM GMT (Updated: 7 April 2020 6:08 AM GMT)

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் ஆட்கொல்லி கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தாராவி அபுதயா வங்கி அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டா், பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண், முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆகியோரை கொரோனா தாக்கி உள்ளது. இவர்கள் தவிர தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பாலிகா நகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரர் உயிரிழந்துவிட்டார்.

இதேபோல தாராவியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஒர்லியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு பணியாளரையும் கொரோனாவிட்டு வைக்கவில்லை தாராவி, மதினா நகரை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் கொரோனா பரவியதற்கு ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தாராவி பகுதியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளான இருவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளான 30-வயது பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் ஆவர்.  இதன் மூலம், மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பை தாராவி பகுதியில் உள்ள பாலிகா நகர் ,வைபவ் குடியிருப்பு, முகுந்த் நகர், மைதினா நகர் ஆகிய 4 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை படுத்தி வருகின்றனர். 

Next Story