டெல்லியில் அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அதிர்ச்சி தகவல்
டெல்லியில் அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முதல் மந்திரி கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 507 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை 2,230 பேர் குணமடைந்தும், 12,974 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர்.
இவற்றில் டெல்லியில் 1,893 பேருக்கு பாதிப்பு உள்ளது. 42 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, ஊரடங்கு தொடர்வது அவசியம். ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு தளர்வுகள் கிடையாது. வரும் 27ந்தேதி ஆய்வு கூட்டமொன்று மீண்டும் நடத்தப்படும்.
டெல்லியில் அறிகுறி இல்லாமல் 186 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என நேற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உள்ளது பற்றி அவர்கள் அறிந்திருக்க கூட இல்லை. இது அதிக வேதனை அளிக்கிறது.
டெல்லியில் அதிவிரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனினும் கட்டுக்குள்ளேயே அது உள்ளது. அதனால் பயப்பட வேண்டியதில்லை.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒரு நபருடன் நான் பேசினேன். அவர், அரசு உணவு வினியோக மையத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறேன் என என்னிடம் கூறினார். அதனால், அந்த உணவு மையத்திற்கு வரும் அனைத்து மக்களிடமும், மையத்தில் பணியாற்றும் பிறருக்கும் துரித பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளேன் என கூறியுள்ளார்.
டெல்லி மக்களை பாதுகாக்க ஊரடங்கு தொடரும். தளர்வுகள் இல்லை. ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story