ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்


ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 April 2020 9:17 AM GMT (Updated: 23 April 2020 9:17 AM GMT)

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது: பாஜக, மத வெறுப்பு வைரஸைப் பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலை தர வேண்டும். நாம் அனைவரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில் இப்படி நடந்து வருவது வேதனைக்குரியது. நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிகப் பெரும் பாதிப்பு செய்யப்பட்டு வருகிறது. நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும். 

தற்போது கொரோனாவைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோரைக் கடுமையாக பாதித்து வருகிறது. வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது 7,500 ரூபாயை வழங்க வேண்டியது அவசியம்.

மே 3 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது விதிக்கப்பட்டிருப்பதையும் தாண்டி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்" என்றார்.


Next Story