சீனாவின் விஷம பின்னணி: இந்தியாவின் பகுதிகளை தனது பகுதிகளாக வரைபடம் வெளியிட்ட நேபாளம்


சீனாவின் விஷம பின்னணி: இந்தியாவின் பகுதிகளை தனது பகுதிகளாக வரைபடம் வெளியிட்ட நேபாளம்
x
தினத்தந்தி 20 May 2020 10:18 AM GMT (Updated: 20 May 2020 12:48 PM GMT)

இந்தியாவின் பகுதிகளை தனது சொந்த பகுதிகளாக வரைபடம் வெளியிட்ட நேபாளம். இதனால் இரு நாடுகளின் உறவுகளில் சிக்கல் எழுந்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தனக்கு சொந்தமானதாக குறிப்பிட்டு நேபாளம்  வெளியிட்டு உள்ள வரைபடத்தால் இரு நாட்டு தூதரக உறவுகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

நேபாள அரசாங்கம் இன்று அந்நாட்டின் புதிய, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது, இது இந்திய பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை நில மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டது.

இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நேபாள பிரதமர் கே.பி. ஒளி நாட்டின் புதிய வரைபடங்கள் வெளியிடப்படும், அது தனது சொந்தமாகக் கருதும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கூறுகையில், "லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள்  நேபாளத்தின் பகுதிகளாகும், மேலும் இந்த பிரதேசங்களை மீட்பதற்கு உறுதியான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நேபாளத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து அதன்படி நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியிடப்படும்.

நேபாளத்தின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்க நேபாள அரசு உறுதிபூண்டுள்ளது" என்றும், "இந்தியாவுடனான நிலுவையில் உள்ள எல்லை மோதல்கள் கிடைக்கக்கூடிய வரலாற்று ஒப்பந்தங்கள், வரைபடங்கள், உண்மைகள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றை நம்பியுள்ள இராஜதந்திர ஊடகம் மூலம் தீர்க்கப்படும்" என்றும் விளக்கினார்.

வடக்கு எல்லையில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைக்கும் சீனாவின் விஷமம் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.  லிபுலேக்கில் இருந்து மானசரோவருக்கு 80 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியா சாலை அமைத்த போதும்  நேபாளம் ஆட்சேபனை எழுப்பியது.

"உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சாலைப் பிரிவு முற்றிலும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளது" என்று நேபாளத்திற்கு இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

நேபாளத்திற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ராவை நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி அழைத்து உள்ளார்.

நடந்துகொண்டிருக்கும் சர்ச்சை புதியதல்ல, 1816 ஆம் ஆண்டு சுகோலி உடன்படிக்கையின் கீழ், நேபாள மன்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை பிரிட்டிசாரிடம் கலாபானி மற்றும் லிபுலேக் உள்ளிட்டவற்றை இழந்தார்.

Next Story