கேரள நிலச்சரிவு: 10-வது நாளாக தொடரும் மீட்பு பணி


கேரள நிலச்சரிவு: 10-வது நாளாக தொடரும் மீட்பு பணி
x
தினத்தந்தி 16 Aug 2020 7:50 AM GMT (Updated: 16 Aug 2020 7:52 AM GMT)

கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

இடுக்கி,


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.

இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

10-வது நாளாக தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம்,  நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமான இன்னும் 10 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story