கொரோனா பரவல் கடவுளின் செயல் நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல்காந்தி,ப.சிதம்பரம், சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்


கொரோனா பரவல் கடவுளின் செயல் நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல்காந்தி,ப.சிதம்பரம், சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
x
தினத்தந்தி 29 Aug 2020 6:58 AM GMT (Updated: 29 Aug 2020 6:58 AM GMT)

கொரோனா பரவல் கடவுளின் செயல் என்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்தை ராகுல்காந்தி ,ப.சிதம்பரம் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் செய்து உள்ளனர்.



புதுடெல்லி

41-வது ஜிஎஸ்டி கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.

அப்போது, நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்தவட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் பொருளாதாரம் 3 செயல்களால் அழிக்கப்பட்டது. முதலாவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிக்கப்பட்டது.
இரண்டாவதாக தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டது.

மூன்றாவதாக கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாகக் பயன்படுத்தியதால், பொருளாதாரம் அழிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டின் பொருளதார வளர்ச்சி மோசமாகி வருவது குறித்து மத்திய அரசு பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டுவருவது குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.


காங்கிரஸ்மூத்த தலைவர் ப.சிதமபரம் கூறும் போது

"தொற்றுநோய் ஒரு 'கடவுளின் செயல்' என்றால், தொற்றுநோயைத் தாக்கும் முன் இந்தியா?  2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலங்களில் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது.

"கடவுளின் தூதராக  நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதுபோல் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி வெளியி்ட்டுள்ள டுவிட்டர் பதிவில்

கோவிட்-19 கடவுளின் செயல் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவிலேயே வீடியோ வெளியிட உள்ளேன். ஜிடிபி சரிவானது 2015-ம் ஆண்டில் இருந்தே நிகழ்ந்துள்ளது.

2015-ல் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. இதுகொரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா?

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 2 வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு ரூ.97,000 கோடியை கடனாக பெறலாம். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரி வசூல் அதிகரிக்கும் போது திரும்ப செலுத்தலாம். அல்லது மாநில அரசுகளே இந்த ஆண்டு ஏற்படும் ஜிஎஸ்டி பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியை ஏற்றுக் கொள்வது என்பதாகும். இதை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Next Story