பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு இயக்கப்படும் ‘ரோரோ’ ரயில் சேவை - முதல்வர் எடியூரப்பா நாளை துவக்கி வைக்கிறார்


பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு இயக்கப்படும் ‘ரோரோ’ ரயில் சேவை - முதல்வர் எடியூரப்பா நாளை துவக்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 29 Aug 2020 5:42 PM GMT (Updated: 29 Aug 2020 5:42 PM GMT)

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு இயக்கப்படும் ‘ரோரோ’ ரயில்சேவையை முதல்வர் எடியூரப்பா நாளை துவக்கி வைக்கிறார்.

பெங்களூரு,

‘ரோரோ’ ரயில் (ரோல் ஆன்-ரோல் ஆப்) என்பது ரயில்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்வது ஆகும். அந்தந்த லாரிகள் பயணிக்க வேண்டிய குறிப்பிட்ட ரயில் நிலையம் வந்த உடன் லாரிகள் இறக்கி விடப்படும். இதன் மூலம் விபத்துக்கள் குறைவதுடன் எரிபொருள் சேமிப்பு, சாலை பாதுகாப்பில் முன்னேற்றம், காற்று மாசுபாடு குறைவு உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய ரயில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் வரை இயக்கப்படுகிறது. சுமார் 682 கி.மீ பயணிக்கும் இந்த ரயில் 17 நிமிடங்களில் குறிப்பிட்ட இலக்கை சென்றடையும். ஒரே நேரத்தில் ஒரு ரயிலில் 42 லாரிகளை ஏற்றிச்செல்ல முடியும். 

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இந்த ரயில் போக்குவரத்தை நாளை(ஞாயிற்றுகிழமை) காலை 9.15 மணியளவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடியசைத்து துவக்கி வைக்கிறார். விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மாநில வருவாய்துறை அமைச்சர் அசோகா மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Next Story