கொரோனா தொற்று 130 கோடி இந்தியர்களின் இலக்குகளை பாதிக்கவில்லை; பிரதமர் மோடி பேச்சு


கொரோனா தொற்று 130 கோடி இந்தியர்களின் இலக்குகளை பாதிக்கவில்லை; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 3 Sep 2020 4:27 PM GMT (Updated: 3 Sep 2020 4:27 PM GMT)

கொரோனா தொற்று பல்வேறு விசயங்களை பாதித்தபோதிலும் 130 கோடி இந்தியர்களின் இலக்குகளை பாதிக்கவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க-இந்திய உயர்மட்ட நல்லுறவு அமைப்பின் 3வது வருடாந்திர தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, நடப்பு நிலைமையில் ஒரு புதிய மனநிலை தேவையாக உள்ளது.

இதில் வளர்ச்சிக்கான அணுகுமுறையானது மனிதனை மையப்படுத்திய ஒன்றாக உள்ளது.  2020ம் ஆண்டு தொடங்கும்பொழுது, எப்படிப்பட்ட முடிவுகளை அது தரும் என யாரேனும் கற்பனை செய்து பார்த்திருந்தனரா?

உலக தொற்றானது ஒவ்வொருவரையும் பாதித்து உள்ளது.  அது நமது பொறுமை, கடின சூழலில் இருந்து மீண்டு வரும் தன்மை, பொது சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதார அமைப்பு ஆகியவற்றை பரிசோதித்து கொண்டிருக்கிறது.

130 கோடி மக்களையும் மற்றும் குறிப்பிட்ட வளங்களையும் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.  உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, 10 லட்சத்தில் மிக குறைந்த இறப்பு விகிதங்களை நமது நாடு கொண்டுள்ளது.  நாட்டில் குணமடைந்தோர் விகிதமும் நிலையாக உயர்ந்து வருகிறது.

இந்த கொரோனா தொற்றானது பல்வேறு விசயங்களை பாதித்தபோதிலும் 130 கோடி இந்தியர்களின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை பாதிக்கவில்லை.  சமீபத்திய மாதங்களில், நிறைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  வர்த்தகம் மேற்கொள்வது எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.  அதனுடன் ஒப்புதல் பெறுவதற்கான அலுவலக நடைமுறைகளும் குறைந்துள்ளன என பேசியுள்ளார்.

Next Story