தொடர்ந்து மிரட்டும் கொரோனா; இந்தியாவில் தொற்று பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது


தொடர்ந்து மிரட்டும் கொரோனா; இந்தியாவில் தொற்று பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 13 Sep 2020 9:45 PM GMT (Updated: 13 Sep 2020 7:55 PM GMT)

இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்து உள்ளது.

புதுடெல்லி,

அகில உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ், எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து பரவி வருகிறது. இந்தியாவிலும் தனது கொடூரத்தை தினந்தோறும் அரங்கேற்றி வரும் கொரோனா, அரசுகளையும், மக்களையும் மிரட்டி வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 94 ஆயிரத்து 372 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 4 நாட்களாக 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பை பெற்று வரும் இந்தியா, தொற்றில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை நாட்டில் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

இதைப்போல கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,114 ஆகும். இதன் மூலம் மொத்த உயிரிழப்புகள் 78 ஆயிரத்து 586 ஆக அதிகரித்து இருக்கிறது. அதேநேரம் நாட்டின் இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக சரிந்துள்ளது

புதிய உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 391 பேர் மடிந்துள்ளனர். மேலும் கர்நாடகாவில் 94, தமிழகம், பஞ்சாப்பில் தலா 74, ஆந்திரா, உத்தரபிரதேசத்தில் தலா 67, மேற்கு வங்காளத்தில் 59, மத்திய பிரதேசத்தில் 37, டெல்லியில் 28, அரியானாவில் 24, அசாமில் 23, சத்தீஷ்காரில் 20, கேரளா, குஜராத்தில் தலா 15, ராஜஸ்தான், உத்தரகாண்டில் தலா 14 பேர் இறந்துள்ளனர்.

மேலும் திரிபுரா (12), பீகார், தெலுங்கானா மற்றும் ஒடிசா (தலா 11), கோவா, காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் (தலா 10), சண்டிகர் (6), புதுச்சேரி (5), சிக்கிம் (3), இமாசல பிரதேசம் (2), மேகாலயா, மணிப்பூர் மற்றும் லடாக்கில் தலா ஒருவர் என பிற மாநிலங்களும் கொரோனா உயிரிழப்புகளை பெற்றிருக்கின்றன.

இதுவரை நேர்ந்துள்ள கொரோனா மரணங்களில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் 29,115 மரணங்களை கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழகம் (8,307), கர்நாடகா (7,161), ஆந்திரா (4,846), டெல்லி (4,715), உத்தரபிரதேசம் (4,349), மேற்கு வங்காளம் (3,887), குஜராத் (3,195), பஞ்சாப் (2,288), மத்திய பிரதேசம் (1,728) போன்ற மாநிலங்களில் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டுள்ளோரின் எண்ணிக்கையும் 37 லட்சத்தை கடந்து விட்டது. குறிப்பாக நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து மீண்டவர்களையும் சேர்த்து 37 லட்சத்து 2 ஆயிரத்து 595 பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் கொரோனாவை வென்றவர் விகிதம் 77.88 ஆக அதிகரித்து உள்ளது.

நாடு முழுவதும் 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர். இது 20.47 சதவீதமாகும்.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் நேற்று முன்தினம் 10 லட்சத்து 71 ஆயிரத்து 702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் இதுவரை நடத்தப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 928 ஆக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் தினசரி 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story