கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது


கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 20 Sep 2020 12:00 AM GMT (Updated: 19 Sep 2020 11:02 PM GMT)

கொரோனா நோய்த் தொற்றை ஒழிக்க போராடும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி,

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த போராடும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுடைய சொத்துக் களை பாதுகாக்கவும் வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்தது. அந்த சட்டத்துக்கு மாற்றாக தொற்று நோய்கள் திருத்த மசோதாவை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

அதன்படி, இவர்களை யாராவது தாக்கினாலோ, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரிகள், தனிமைப்படுத்துதல் மையம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினாலோ அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தாக்குதல் வழக்குகளை இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி 30 நாட்களுக்குள் விசாரிக்கவும், கோர்ட்டில் வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் இந்த மசோதா நிறைவேறியது.

கொரோனா காரணமாக தொழில்துறை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 2-வது திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி, கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் கம்பெனிகளுக்கு எதிராக புதிதாக திவால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

இந்த மசோதா தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கும் வகையிலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் அமைந்து இருப்பதாக கூறி பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம் இந்த மசோதாவை சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

Next Story