பீகார் முதல் மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்


பீகார் முதல் மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
x
தினத்தந்தி 15 Nov 2020 9:37 AM GMT (Updated: 15 Nov 2020 9:37 AM GMT)

பீகார் மாநில முதல் மந்திரியாக தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதல் மந்திரி பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து, கவர்னர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்து தனது மந்திரி சபையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார். நிதிஷ்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில்,  இன்று நண்பகல் நிதிஷ் குமார் இல்லத்தில்,   பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார்  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  

தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் உரிமை கோரினார்.  இதையடுத்து, பீகார் முதல் மந்திரியாக 7-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாகவும் நிதிஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

Next Story