விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் தாக்கரே விமர்சனம்


விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் தாக்கரே விமர்சனம்
x
தினத்தந்தி 13 Dec 2020 5:20 PM GMT (Updated: 13 Dec 2020 5:20 PM GMT)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் எல்லையில் விவசாயிகள் இன்று 18-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

மும்பை:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் எல்லையில் விவசாயிகள் இன்று 18-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர். விவசாயிகள் நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் நுழைந்துவிட்டதாக பாஜக மந்திரிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் இதே கருத்தையே தெரிவித்து வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிசும் அதேகருத்தையே தெரித்து வருகிறார். மேலும், முதல்மந்திரி உத்தவ் தாக்கரேவின் ஆட்சியில் மகாராஷ்டிராவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், தேவேந்திரபட்னாவிசின் கருத்து சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்மந்திரியுமான உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேவேந்திரபட்னாவிஸ் குற்றம்சுமத்தி வருகிறார். தற்போது டெல்லியில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

உணவு வழங்குபவர்களை பயங்கரவாதிகள் என நீங்கள் கூறுகிறீர்கள். விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள்.

என்றார்.




Next Story