குளிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயார்; கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி பேட்டி


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 16 Dec 2020 10:31 PM GMT (Updated: 16 Dec 2020 10:31 PM GMT)

குளிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி சவுகான் கூறினார்.

கொல்கத்தா, 

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த இந்திய போர் வெற்றி பொன்விழா கொண்டாட்டம், கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் நேற்று நடந்தது. இந்த விழாவின் இடையே கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

லடாக் மோதல்களுக்கு பின்னர் கிழக்கு கட்டளை பகுதியில் எந்த விதமான ஊடுருவல்களோ, பெரிய அளவிலான மோதல்களோ இல்லை. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்கு பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் மகிழ்ச்சியான நட்புறவும், பரஸ்பர நம்பிக்கையும் இல்லாமல் போய் விட்டது. மீண்டும் இதை கட்டமைக்க காலம் எடுக்கும்.

லடாக் நெருக்கடியின்போது, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும், சீன படையும் துருப்புகளை குவித்தன. ஆனால் இப்போது கிழக்கு பிராந்தியத்தில் குளிர்காலத்தின் தொடக்கத்தையொட்டி, துருப்புகள் விலக்கிக்கொள்ளப்படுவதை பார்க்க முடிகிறது.இருந்தாலும், குளிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.

சிக்கிம் எல்லையிலும், அருணாச்சலபிரதேசத்தின் காமெங்கிலும் சாலைகள் மற்றும் தடங்கள் அமைக்கும் விரைவான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. நாமும் பரஸ்பர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அவர்கள் எல்லைப்பகுதிகளை அடுத்து மாதிரி கிராமங்களை உருவாக்க முயற்சித்தனர். அங்கு அவர்கள் திபெத்திய நாடோடி மக்களை குடியமர்த்த விரும்புகின்றனர்.

டோக்லாமை பொறுத்தமட்டில், பூடானுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது. இந்தியா, பூடான், சீனா என 3 நாடுகளுக்கு இடையேயான முச்சந்திப்பை தீர்மானிக்க வேண்டிய நிலை வரும்போது, இந்தியாவின் ஈடுபாடு வரும். வடகிழக்கின் சில பகுதிகளில் கிளர்ச்சி தடுப்பு நிலைமை நிலையானது. நாம் அங்கிருந்து ராணுவம் குறைத்துக்கொள்ளப்படுவதை தற்போது காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story