மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கிறோம் - விவசாய சங்கங்கள்
மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கிறோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 33-வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இதனால், விவசாயிகளின் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி எல்லையின் பல்வேறு சாலைகளை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய அமைப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 30-ம் தேதி (புதன்கிழமை) பேச்சுவார்த்தைக்கு வரும்படியும், பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கிறோம் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அழைப்பின் நோக்கம் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story