வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால் விழா மேடையை சூறையாடிய விவசாயிகள்; முதல்-மந்திரி நிகழ்ச்சி ரத்து


வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால் விழா மேடையை சூறையாடிய விவசாயிகள்; முதல்-மந்திரி  நிகழ்ச்சி ரத்து
x
தினத்தந்தி 10 Jan 2021 8:36 PM GMT (Updated: 10 Jan 2021 8:36 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், அரியானா முதல்-மந்திரி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியின் மேடையை விவசாயிகள் சூறையாடினர்.

சண்டிகார், 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயத்தில், வேளாண் சட்டங்களின்நன்மைகளை விளக்கி, கிராம மக்களிடையே பேச பா.ஜனதா மூத்த தலைவரும், அரியானா மாநில முதல்-மந்திரியுமான மனோகர்லால் கட்டார் திட்டமிட்டார்.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் கைம்லா கிராமத்தில், ‘கிசான் மகாபஞ்சாயத்து’ என்ற பெயரில் நேற்று விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் மனோகர்லால் கட்டார் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பாரதீய கிசான் சங்கம் (சாருனி) எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதையும் மீறி நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், அந்த நிகழ்ச்சியை சீர்குலைக்கும் நோக்கத்தில், பாரதீய கிசான் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கைம்லா கிராமத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். கையில் கருப்பு கொடிகளை ஏந்தியபடி, பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டு அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

போலீசாரின் எதிர்ப்பை மீறி அவர்கள் விரைந்தனர். இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் மீது போலீசாா் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

ஆனால், அதையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் கைம்லா கிராமத்தை நோக்கி சென்றனர். கிராம நுழைவாயிலில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அவற்றை கடந்து சென்ற விவசாயிகள், ‘கிசான் மகாபஞ்சாயத்து’ நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தை அடைந்தனர். அங்கு போடப்பட்டிருந்த மேடையை பிய்த்து எறிந்தனர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தையும் விவசாயிகள் கைப்பற்றினர். இதற்கிடையே, விவசாயிகள் சூறையாடிய சம்பவத்தை அறிந்து, முதல்-மந்திரி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Next Story