தெலுங்கானாவில் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு


தெலுங்கானாவில் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2021 4:58 PM GMT (Updated: 11 Jan 2021 4:58 PM GMT)

தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கத் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை அவர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல இன்டர்மீடியட் கல்லூரிகள் மற்றும் டிகிரி கல்லூரிகளுக்கும் பிப்.1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துபேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story