போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வருகிற 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்பணி 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, நாடு ஆவலுடன் எதிர்பார்த்த கொரோனா தடுப்பூசி போடும் பணி, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இதன் காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், மறுஉத்தரவு வரும்வரை போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை வரும் ஜனவரி 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story