ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி


ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி
x
தினத்தந்தி 16 Jan 2021 4:51 PM GMT (Updated: 16 Jan 2021 5:37 PM GMT)

உலகெங்கிலும் உள்ள நாடுகளை போல இந்தியாவில் ஏன் ஆட்சியாளர்கள் தடுப்பூசி போட முன் வரவில்லை என காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில்   கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இரு தடுப்பூசிகளும் போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக போடப்படுகிறது. 

இந்த நிலையில்,   ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து  மனிஷ் திவாரி கூறியதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?. பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தவிர்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.  மருத்துவ பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் உள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது ஏன்? என தொடர்ந்து மனிஷ் திவாரி கேள்வி எழுப்பி வருகிறார். 

மனிஷ் திவாரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “ எம்.பியும் அவரது கட்சியும் அவநம்பிக்கை மற்றும் வதந்திகளை பரப்புவதில் ஆர்வமாக இருப்பதாக கூறினார். மேலும்,  முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் புகைப்படங்களையும் தனது டுவிட்டுடன் ஹர்ஷ்வர்தன் இணைத்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மனிஷ் திவாரி, எனது கவலைகள் உண்மையானவை. கற்பனையானவை அல்ல. நார்வேயில் என்ன நடைபெற்றது என பாருங்கள். அது வேறு தடுப்பூசியாக இருக்கலாம். ஆனால், தடுப்பூசி தேசியவாதத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது. உங்களிடம் இருந்து சிறப்பான பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story