மும்பையில் பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு: உத்தவ் தாக்கரே


மும்பையில் பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 25 Jan 2021 11:09 PM GMT (Updated: 25 Jan 2021 11:09 PM GMT)

மும்பையில் பொதுமக்களை மின்சார ரெயில்களில் அனுமதிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.


மும்பை, 

மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. நிலைமை சற்று சீரானதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் மும்பையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் பொதுமக்கள் பயணம் செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது மின்சார ரெயில்களில் பெண்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதித்தால் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து விடும் என மாநில அரசு அஞ்சுகிறது. எனவே பொதுமக்களுக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். முதல்-மந்திரியின் இந்த அறிவிப்பை அடுத்து மும்பையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story