வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் அதில் உள்ள ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்ட முடியவில்லை - மத்திய வேளாண் அமைச்சர்


வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் அதில் உள்ள ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்ட முடியவில்லை -  மத்திய வேளாண் அமைச்சர்
x
தினத்தந்தி 5 Feb 2021 11:04 AM GMT (Updated: 5 Feb 2021 11:04 AM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் அதில் உள்ள ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டுவதில் தோல்வி அடைந்துள்ளனர் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

புதுடெல்லி

மாநிலங்களவையில் இன்று  நடைபெற்ற பட்ஜெட் தொடரின் 6 வது நாளில், பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய தலைநகரில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் முன்னேற்றம் இல்லாததை எடுத்துரைத்தனர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, விவசாயிகளுக்கு அத்தியாவசிய நீர் மற்றும் மின்சாரம் வழங்கவில்லை.பெர்லின் சுவரை போல் முள் கம்பி வேலிகள். போடப்பட்டு உள்ளன . இந்த விஷயங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடானவை என குற்றம் சாட்டினார்.

டெல்லி எல்லைகளில் நிலைமை குறித்து கவலை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் மிஸ்ரா, எதிர்ப்பு இடங்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் தடை செய்வது  மனித உரிமை மீறல் என்று கூறினார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்தை அவதூறு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செங்கோட்டையில் குடியரசு தின வன்முறை பற்றி பேசிய ரவுத், வன்முறையின் பின்னணியில் உண்மையான குற்றவாளியை ஏன் இன்னும்  கண்டுபிடிக்கவில்லை என்று கேட்டார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வேளாண்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர்  கூறியதாவது:-

வேளாண்  சட்டங்கள் மீதான போராட்டங்கள்  தூண்டி விடப்பட்டு ஒரே ஒரு மாநில குறுகிய வரம்பிற்குள் நடைபெறுபவை.விவசாயிகள் தூண்டப்படுகிறார்கள். 

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களால் ஒரேயொரு குறையைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை.  இந்த விஷயத்தில் நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை . சட்டத்தில் என்ன குறை என்று கூற ஒருவர் கூட முன்வரவில்லை .விவசாயிகளின் நலனை உறுதி செய்வதில் வேளாண் சட்டம் ஒரு முக்கியமான பங்கை உருவாக்குகிறது

நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை உலகமே அறியும், ஆனால் ரத்தத்தை பயன்படுத்தி எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக்குத்தான் தெரியும்  என கூறினார்.


Next Story