உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; மீட்பு பணிகள் தீவிரம்


உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; மீட்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 Feb 2021 7:53 PM GMT (Updated: 14 Feb 2021 7:53 PM GMT)

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 9-வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

டேராடூன்,

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்னவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று 8 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 5 உடல்கள் தபோவன் சுரங்கத்தில் இருந்தும், 3 உடல்கள் ரிஷிகங்கா நீர்மின் நிலைய பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டன. அவை அங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மீட்கப்பட்ட 8 உடலையும் சேர்த்து, இந்த பேரிடர் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து விட்டது. அதேநேரம் இன்னும் 158 பேரை காணவில்லை. எனவே அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Next Story