ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை


ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை
x
தினத்தந்தி 18 Feb 2021 7:36 AM GMT (Updated: 18 Feb 2021 7:36 AM GMT)

ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஜெய்ப்பூர்,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதிலும் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து, ரூ.100.13-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ.2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசல் ஒரு லிட்டர் ரூ.93.16 க்கு விற்பனை செய்யப்பட்டது. கங்கா நகரில் ஒரு லிட்டர் உயர் ரக பெட்ரோல் ரூ.102.91-க்கும், டீசல் ரூ.95.79-க்கும் விற்பனையானது.

பெட்ரோல் லிட்டருக்கு 25 பைசா உயர்வால் டெல்லியில் லிட்டர் ரூ.89.54 ஆகவும், டீசல் ரூ.79.95 ஆகவும் விற்கப்பட்டது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.98-க்கும் விற்பனையானது.

மத்திய பிரதேச மாநிலம், அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.90-க்கும், டீசல் லிட்டர் ரூ.90.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு ரூ.32.90-ம், டீசல் மீது லிட்டருக்கு ரூ.31.80-ம் விதிக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66-ம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.  ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Next Story