பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு; மத்திய மந்திரி கட்காரி


பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு; மத்திய மந்திரி கட்காரி
x
தினத்தந்தி 1 March 2021 4:03 PM GMT (Updated: 1 March 2021 4:03 PM GMT)

பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி கட்காரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.

எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம். ‘பாஸ்டேக்’ முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த 15ந்தேதி நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து இருந்தது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மந்திரி நிதின் கட்காரி, தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளுக்கான மதிப்பீடு மற்றும் தரவரிசையை இன்று வெளியிட்டார்.

இதன்பின்னர் பேசிய கட்காரி, நாட்டில் நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு பாஸ்டேக்
கட்டாயம் என அறிவிக்கப்பட்ட சூழலில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டு உள்ளது.

மொத்த சுங்க சாவடிகளில் 80 சதவீதம் அளவுக்கு காத்திருப்பு நேரம் பூஜ்யம் என்ற அளவில் உள்ளது.  பாஸ்டேக் கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, சுங்க கட்டண வசூல் 80 சதவீதத்தில் இருந்து 93 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது.

சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதற்கான நேரம் இன்னும் குறைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம் என கூறியுள்ளார்.

Next Story