மேற்கு வங்காளத்தில் தர்மயுத்தம்; ஜெயிக்கப்போவது யார்?


மம்தா பானர்ஜி; சுவேந்து அதிகாரி
x
மம்தா பானர்ஜி; சுவேந்து அதிகாரி
தினத்தந்தி 13 March 2021 9:24 PM GMT (Updated: 13 March 2021 9:24 PM GMT)

நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கமாய் ஈர்த்திருக்கிறது, மேற்கு வங்காளம்.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில், தனித்து தெரிவது மேற்கு வங்காளம்தான்.

தர்மயுத்தம்
அங்கே 8 கட்டங்களாக நடக்க உள்ள சட்டசபை தேர்தல் ஒரு தர்ம யுத்தமாக மாறிக்கொண்டிருக்கிறது.இங்கு கேள்வி, திரிணாமுல் காங்கிரசா அல்லது பா.ஜ.க.வா என்பதல்ல.மம்தாவா அவரால் வளர்க்கப்பட்ட சுவெந்து அதிகாரியா என்பதுதான்.ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வகையில் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா, நேற்று வரை 
மம்தாவின் முகமாக விளங்கி, இன்றைக்கு பா.ஜ.க.வின் முகமாக மாறியுள்ள சுவெந்து அதிகாரியை முதல்-மந்திரி ஆக்கி அழகு பார்க்குமா பா.ஜ.க. என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

பா.ஜ.க. பெயரை உச்சரிக்காத மம்தா
நந்திகிராமில் வேட்பு மனுதாக்கல் செய்யப்போன இடத்தில் கடந்த புதன்கிழமையன்று மம்தா தாக்கபட்டார், அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இது ஒரு நாடகம் என்று பா.ஜ.க. தரப்பு ஒரு பக்கம் சொல்கிறது. இதைப்போன்ற நாடகங்கள் ஒன்றும் மம்தாவுக்கு புதிது அல்ல என்று சொல்வோரும் உண்டு.தன்னை தாக்கியதற்கு பின்னால் பெரும் சதி நடந்திருக்கிறது என்றுதான் வங்கப்புலி உறுமியது. ஆனால் பா.ஜ.க.வின் பெயரைக்கூட அவர் உச்சரிக்கவில்லை.இந்த காயம், மம்தாவை பிரசார களத்தில் இருந்து அப்புறப்படுத்துமா என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவர் நான் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்று கர்ஜித்தார்.இப்போது அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு இருக்கிறார். 
பிரசார களத்தில் அவரது அனல் பேச்சு எந்த நேரத்திலும் கேட்கக்கூடும்.

பொன்னான பூமியாக்க பா.ஜ.க. சூளுரை
மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்தால், அதை பொன்னான பூமியாக மாற்றிக்காட்டுவதாக பா.ஜ.க. தலைவர்கள் சூளுரைத்து வருகின்றனர். 294 இடங்களை கொண்டுள்ள சட்டசபையில் 200 இடங்களை பிடித்தாக வேண்டும் என்பதுதான் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்படுகிறவருமான அமித்ஷாவின் இலக்கு.பிரசார களத்தில் மோடி, அமித்ஷா என இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக மாறி முழங்கப்போகிறார்கள். அவர்களுக்கு கூடக்கூடிய கூட்டம், ஓட்டு வங்கியாக மாறுமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மின்னுகிறார் மம்தா
ஆனால், இடதுசாரிகளின் கோட்டையாக மாறி இருந்த மேற்கு வங்காளத்தை திரிணாமுல் காங்கிரசின் கோட்டையாக மாற்றிக்காட்டிய மம்தா இப்போது தனது அரசியல் வாழ்வின் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறார்.யாரையெல்லாம் தனது தளகர்த்தர்கள் என்று நம்பி வளர்த்தாரோ அத்தனை பேரும் பா.ஜ.க.வுக்கு தாவி விட்டாலும் அவர் நிலை குலைந்து போய் விடவில்லை.அதே நேரம் பா.ஜ.க.வையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை வென்ற பா.ஜ.க., கடந்த தேர்தலில் 18 இடங்களை பிடித்தது. ஓட்டு விகிதமும் 40.64 சதவீதமாக எகிறியது. திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் வெறும் 3 சதவீதம்தான்.இதையெல்லாம் கண்டு மம்தா அஞ்சி விடவில்லை. தனது கவர்ச்சிகரமான ஆளுமையுடன், கிராமப்புற வங்காளத்தின் அசைக்க முடியாத சக்தியாக அவர் இன்றைக்கும் திகழ்கிறார். அவரது நலத்திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகளாக திகழ்கிற கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மம்தா மின்னுகிறார்.

டார்ஜிலிங் மற்றும் வடக்கு வங்காள பகுதிகளில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு பின்னால் இருந்தவரை திரிணாமுல் காங்கிரஸ் தன் வசப்படுத்தி இருக்கிறது. அவர்தான் கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் நிறுவனர், தலைவர் பீமல் குருங். இவர் கூர்க்லாந்துவின் தீவிர ஆதரவாளர். இவரது கட்சி டார்ஜிலிங், கலிம்பாங், ஜல்பாய்குரி பகுதிகளில் வலுவாக உள்ளது. இங்கு 13 சட்டசபை தொகுதிகள் 
இருக்கின்றன. வடக்கு வங்காளம், கூச் பெஹார், அலிபுர்துவார், வடக்கு தினாஜ்பூர் பகுதிகளில் ஓரளவுக்கு கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா உள்ளது. இங்கு 23 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.

நீயா, நானா என்கிற அளவுக்கு போட்டி கடுமையாகி வருகிற நிலையில் இந்த எண்ணிக்கை பெரியது என்கிறார்கள் மேற்கு வங்காளவாசிகள்.வடக்கு வங்காளத்தில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கின்றன. இங்குள்ள 8 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. 7 தொகுதிகளை கடந்த தேர்தலில் கைப்பற்றியது என்றால் அதன் பின்னணியில் இருந்தது கூர்கா ஜன்முக்தி மோர்ச்சாதான். இப்போது இந்த கட்சி, திரிணாமுல் காங்கிரசுடன் கரம் கோர்த்திருப்பது, கடந்த நாடாளுமன்ற தேர்தலை வைத்து இந்த வடக்கு வங்காளத்தை மொத்தமாக பிடித்து விடலாம் என கணக்கு போட்டு வருகிற 
தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்கிறார்கள்.இந்த கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் 3 இடங்களை விட்டுக் கொடுத்திருக்கிறது. இந்த 3 இடங்களும் 2011, 2016 தேர்தல்களில் அந்த கட்சியின் வசம் இருந்தவைதான்.

நடக்கப்போவது என்ன?
எப்படியும் இந்த முறை மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப்பிடித்து மம்தாவுக்கு முடிவுரை எழுதி விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கான அத்தனை வேலைகளையும் களம் இறங்கியும் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் வங்கப்புலி மம்தாவோ, ‘‘ம்கூம், நானேதான் வங்கத்தின் மகள், வெற்றிக்கொடி கட்டிக்காட்டுவேன்” என்று வரிந்து கட்டிக்கொண்டிருக்கிறார். நடுநிலையாளர்கள் சொல்வது, திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும், ஆனால் முந்தைய தேர்தல்களை விட குறைவான இடங்களையே கைப்பற்றும் என்பதாக இருக்கிறது.

நடக்கப்போவது என்ன? மே 2-ல் கிளைமாக்ஸ். பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story