ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்


ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த  இளம்பெண் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்
x
தினத்தந்தி 13 March 2021 9:54 PM GMT (Updated: 13 March 2021 9:54 PM GMT)

ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் நேற்று பரபரப்பு வீடியோ வெளியிட்டார். அதில் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மந்திரிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் நேற்று பரபரப்பு வீடியோ வெளியிட்டார். அதில் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மந்திரிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.5 கோடி வாங்கிவிட்டு....

  கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் இளம்பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானது. இந்த நிலையில் ஆபாச வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ரமேஷ் ஜார்கிகோளி மிரட்டியதாக, பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் புகார் அளித்து இருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் வந்து புகார் அளித்தால் தான் வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் கூறிவிட்டனர். இதற்கிடையே ரூ.5 கோடி வாங்கிவிட்டு ரமேஷ் ஜார்கிகோளி மீது தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தான் கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக தினேஷ் கல்லஹள்ளி கூறி இருந்தார்.

  இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. பெங்களூரு சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருந்தது.

மடிக்கணினிகள் பறிமுதல்

  அந்த குழுவினர் நேற்று முன்தினமே இளம்பெண்ணின் நண்பர் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். நேற்று காலை அவர்கள் விடுவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று பெங்களூரு, துமகூரு, பெங்களூரு புறநகர், பீதர், பால்கி ஆகிய பகுதிகளில் சிறப்பு விசாரணை குழு போலீசார் ஆபாச வீடியோ தயாரித்த விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தி இருந்தனர். அப்போது கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள், ஹார்டுடிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தேவனஹள்ளி அருகே விஜயபுரா பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் ஆபாச வீடியோ வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும், இந்த விவகாரம் தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி போலீசில் புகார் கொடுக்காமல் இருந்து வந்தார். இது சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணைக்கு பின்னடவை ஏற்படுத்தி இருந்தது. ரமேஷ் ஜார்கிகோளி புகார் கொடுக்காத பட்சத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

போலீசில் புகார்

  இந்த நிலையில் நேற்று மதியம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற முன்னாள் எம்.எல்.ஏ.வும், ரமேஷ் ஜார்கிகோளியின் நண்பருமான நாகராஜ் என்பவர், ரமேஷ் ஜார்கிகோளி சார்பில் ஒரு புகார் மனுவை அளித்தார். ரமேஷ் ஜார்கிகோளியின் கையெழுத்திடப்பட்டு இருந்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை நடந்து உள்ளது. அரசியல் ரீதியாக என்னை ஒழிக்கவும், மிரட்டி பணம் பறிக்கவும் முயற்சி செய்து உள்ளனர். எனது போலி ஆபாச வீடியோவை பெங்களூரு சதாசிவநகரில் வைத்து 3 மாதங்களாக தயாரித்து உள்ளனர். இந்த வீடியோ வெளியானதன் மூலம் மனதளவில் நான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு எதிராக ஏராளமானோர் உள்ளனர். அரசியல் ரீதியாக பழிவாங்கவே இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. எனது போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

5 பிரிவுகளில் வழக்கு

  அந்த புகாரின்பேரில் சதாசிவநகர் போலீசார் 34 (குற்ற செயலை கூட்டாக செய்வது), 120 (உள்நோக்கத்துடன் குற்றச்செயல்களை செய்வது), 385, 465, 469 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ரமேஷ் ஜார்கிகோளி நேற்று காலை வரை புகார் எதுவும் கொடுக்காததால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு விசாரணை குழு போலீசார் திணறி வந்தனர்.

  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்தாலும், அவர்களை கைது செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. தற்போது ரமேஷ் ஜார்கிகோளி புகார் மீது வழக்குப்பதிவு ஆகி இருப்பதால், இனி சிறப்பு விசாரணை குழு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக யாரை வேண்டும் என்றாலும் கைது செய்யலாம். இனி தான் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம்பெண் வீடியோ வெளியிட்டார்

  இத்தகைய சூழ்நிலையில் ரமேஷ் ஜார்கிகோளி புகார் அளித்த சில மணி நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் இளம்பெண் நேற்று இரவு ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோ 34 வினாடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோ இளம்பெண் பேசியிருந்ததாவது:-

குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

  ரமேஷ் ஜார்கிகோளியுடன் நான் இருந்த ஆபாச வீடியோ வெளியானதன் மூலம் எனது மானம், மரியாதை போய் விட்டது. இந்த வீடியோ யார் எடுத்தது? யார் வெளியிட்டது? என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறினார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து எனது வீட்டில் வந்து நிறைய பேர் கேட்கிறார்கள்.

  எனது தந்தை, தாய் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தனர். நானும் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. இந்த வீடியோ வெளியான விவகாரத்தால் எனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மையிடம் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்.
  இவ்வாறு அந்த இளம்பெண் வீடியோவில் பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் விஸ்வரூபம்

  இளம்பெண் பேசிய வீடியோவால் ஆபாச வீடியோ விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது கர்நாடக அரசியலில் மேலும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

Next Story