இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது - ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது - ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது
x
தினத்தந்தி 24 March 2021 2:18 AM GMT (Updated: 24 March 2021 2:18 AM GMT)

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ஓட்டெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தன.

புதுடெல்லி,

இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் மிகச்சாதாரணமாக நடந்தன. போரில்லா பிரதேசங்களில்கூட அப்பாவித்தமிழ் மக்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இந்த மானுட சோகத்துக்கு நீதி கேட்டு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 46-வது அமர்வில் இங்கிலாந்து, ஜெர்மனி, மலாவி, மாண்டிநீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினையை நேற்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை நேற்று காலையில் எழுப்பிப்பேசினார். அப்போது அவர், “இலங்கையில் கடந்த காலத்திலும். தற்போதும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகிற குற்றச்செயல்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்கு அளிக்க வேண்டும். இதுபற்றி அங்குள்ள இந்திய பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும், “பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படும், தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை, ஜெனீவாவில் உள்ள இந்திய பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ‘இலங்கையில் நல்லிணக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற இந்த தீர்மானம், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நேற்று பிற்பகலில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக, 47 நாடுகளில் 22 நாடுகள் ஓட்டுப்போட்டன. 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்கு அளித்தன.


இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. தீர்மானத்துக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையிலான நாடுகள் ஓட்டு போட்டதால், தீர்மானம் நிறைவேறியது.

இது இலங்கை உள்நாட்டுப்போரால் பாதிப்புக்குள்ளான உலகமெங்கும் உள்ள இலங்கை தமிழர்களுக்கு சற்றே ஆறுதலைத்தந்துள்ளது.

தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்பாக ஜெனீவாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி பவன்குமார் பாதே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருந்ததாவது:-

இலங்கையில், மனித உரிமைகள் தொடர்பான கேள்விக்கான இந்தியாவின் அணுகுமுறை 2 அடிப்படை கருத்துக்களால் வழிநடத்தப்படுகிறது. ஒன்று, இலங்கை தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, கண்ணியம், அமைதியுடன் வாழ்வதற்கு எங்களது ஆதரவு உண்டு. இன்னொன்று, இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகும்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தின்படி, மாகாண கவுன்சில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த தனது உறுதியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது.

நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும், அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும், மனித உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக ஈடுபட இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story