கொரோனா பரவல் எதிரொலி: ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் தகவல்


கொரோனா பரவல் எதிரொலி: ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் தகவல்
x
தினத்தந்தி 7 April 2021 9:04 PM GMT (Updated: 7 April 2021 9:04 PM GMT)

கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை,

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் ஏற்கனவே மொத்தம் 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 7 ஆயிரம் தரிசன டோக்கன்கள் குறைக்கப்பட்டு, தற்போது 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருப்பதி மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் திருப்பதி, திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதையடுத்து வரும் 12-ந்தேதியில் இருந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன பக்தர்களுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு வரும் 11-ந்தேதி மாலையுடன் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு, 12-ந்தேதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும், பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதி பற்றி தகவல் தெரிவிக்கப்படும். அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story