கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கண்கள் தானம்


மந்திரி சுதாகர்
x
மந்திரி சுதாகர்
தினத்தந்தி 7 April 2021 9:08 PM GMT (Updated: 7 April 2021 9:08 PM GMT)

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கண்களை தானம் செய்வதாக ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்திடம் கடிதம் வழங்கினார்.

பெங்களூரு:

மந்திரி சுதாகர் கண்கள் தானம்

  உலக சுகாதார தினத்தையொட்டி கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் அவர் தனது கண்களை தானம் செய்வதாக கூறினார். மேலும் இதற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டு, ராஜீவ்காந்தி பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.
  அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  உலக சுகாதார தினத்தையொட்டி நான் இன்று (அதாவது நேற்று) எனது கண்களை தானம் செய்துள்ளேன். அதற்கான ஆவணங்களில் நான் கையெழுத்து இட்டுள்ளேன். நாம் கண்களை தானம் செய்வதால், நமக்கு பிறகு நமது கண்கள் வேறு ஒருவருக்கு பார்வையை வழங்கும். ஒவ்வொருவரும் கண்களை தானம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கண் பார்வை என்பது மிக முக்கியமானது.

40 ஆயிரம் பேர்...

  நாம் செய்யும் கண்கள் தானம், வேறு ஒருவருக்கு வரமாக அமையும். நமது நாட்டில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் கண்களை தானம் செய்கிறார்கள். இதில் 35 ஆயிரம் கண்கள் மட்டுமே சரியான நேரத்திற்கு கிடைக்கிறது. சுமார் 5 ஆயிரம் கண்கள் பல்வேறு காரணங்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. 

ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். இத்தகைய விஷயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
  இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story