கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்


கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 10 April 2021 4:50 PM GMT (Updated: 10 April 2021 4:50 PM GMT)

மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மும்பை, 

மராட்டியத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்காக மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 120 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் தனியார் மையங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் பி.கே.சி.யில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட மையமும் அடங்கும்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மருந்து இருப்பு இல்லை என்று கூறி நேற்று முன்தினம் மாலையே பல மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் தடையின்றி தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சந்தேகத்துடனே பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வந்தனர். அப்போது பல மையங்கள் மூடப்பட்டு இருந்தன. மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. தடுப்பூசி மருந்து இல்லாததால் பொதுமக்களை சுகாதார ஊழியர்கள், போலீசார் திருப்பி அனுப்பினர்.

மும்பையில் மொத்தம் உள்ள 120 மையங்களில் 75 மையங்கள் மூடப்பட்டு இருந்தது. இதில் பல தனியார் மையங்கள் ஆகும். மாநகராட்சியின் பி.கே.சி. பிரமாண்ட மையத்தில் 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்ட பின்னர் அந்த மையம் மூடப்பட்டது. அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சில மையங்களும் அடுத்தடுத்து மூடப்பட்டதாக தெரியவந்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 1.80 லட்சம் டோஸ் மருந்து வர இருப்பதாகவும், அதற்காக காத்திருப்பதாகவும் மும்பை மாநகராட்சி சுகாதார நிர்வாக அதிகாரி மங்களா கோமரே தெரவித்தார்.

தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதால், ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் புலம்பியபடி திரும்பி சென்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு, மராட்டிய அரசு இடையே ஏற்கனவே வார்த்தை மோதல் ஏற்பட்டு இருந்தது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மராட்டியம் 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை வீணடித்ததாக குற்றம்சாட்டினார்.

இதற்கு நேற்று பதிலளித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து பாதி அளவு மருந்து தான் வீணானதாக விளக்கம் அளித்தார்.

Next Story