மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைகிறது; சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைகிறது; சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 9:39 PM GMT (Updated: 4 May 2021 9:39 PM GMT)

மராட்டியத்தில் மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

இது குறித்து அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைகிறது

மராட்டியத்தில் தற்போது 15 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மும்பை, தானே, துலே, நாந்தெட், பண்டாரா, நாசிக், லத்தூர், நந்துர்பர், நாக்பூர், அவுரங்கபாத், அமராவதி, ராய்காட், உஸ்மனாபாத், சந்திராப்பூர், கோண்டியா ஆகியவை அந்த மாவட்டங்கள் ஆகும்.அதேவேளையில் சாங்கிலி, சத்தாரா, புல்தானா, கோலாப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றை குறைத்து, நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்குடன் பணியாற்றி வருகிறோம். மேலும் இந்த மாவட்டங்களில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக படுக்கைகளை அதிகரித்து வருகிறோம்.

பாதிப்பு சதவீதம்

மாநிலத்தில் பரிசோதனை செய்பவர்களில் தொற்று கண்டறியப்படும் சதவீதம் 27-ல் இருந்து 25 ஆக குறைந்து உள்ளது. தினமும் 2.5 லட்சம் முதல் 2.8 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 65 சதவீதம் ஆர்.டி-பி.சி.ஆர். முறையிலும், 35 சதவீதம் ஆன்டிஜன் விரைவு பரிசோதனை முறையிலும் சோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை. இந்தநிலையில் பாதிப்பு சதவீதம் குறைந்து இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

தடுப்பூசி

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியிலும் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 9 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளது.

18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 5 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை அந்த பிரிவினருக்கு 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது.

சீரம் நிறுவனத்துடன் பேசவில்லை

கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி லண்டனின் தெரிவித்த கருத்தை அடுத்து நாங்கள் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவர் இந்தியா திரும்பிய பிறகு பேசுவோம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3.5 லட்சம் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளும், 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் மராட்டியத்திற்கு வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story