தெலுங்கானாவில் கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்து தனிமைபடுத்திய கணவன்
தெலுங்கானாவில் கொரோனா பாதித்த மனைவியை வீட்டுக்கு வெளியே உள்ள குளியலறையில் 5 நாட்களாக தங்கவைத்திருந்த கணவருக்கு அறிவுரை கூறி அவரது மனைவியை போலீசார் மீட்டனர்.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா என்ற பகுதியைச் சேர்ந்த பெத்தய்யா - நரசம்மா தம்பதி. கடந்த 5 நாட்களுக்கு முன் நரசம்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து நரசம்மாவை வீட்டுக்குள் வரக்கூடாது எனக் கூறி வெளியே உள்ள சிறிய அளவிலான பாத்ரூமில் தங்கவைத்த பெத்தய்யா, அவருக்கு போதிய உணவைக் கூட வழங்காமலும் கழிவறைக்குச் செல்லக் கூட வீட்டுக்குள் அனுமதிக்காமலும் தடை விதித்ததாகக் கூறப்படுகிறது.
நரசம்மா படும் அவதியைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், பெத்தய்யாவுக்கு கொரோனா குறித்து மனநல ஆலோசனை வழங்கி, நரசம்மாவை வீட்டில் உள்ள தனியறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களே தவிர, புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story