எனக்கு மாணவர்களின் வருங்காலமே முக்கியம்: 10, 12ம் வகுப்பு வாரிய தேர்வுக்கு நிபுணர் குழு அமைத்த மம்தா பானர்ஜி


எனக்கு மாணவர்களின் வருங்காலமே முக்கியம்:  10, 12ம் வகுப்பு வாரிய தேர்வுக்கு நிபுணர் குழு அமைத்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 6 Jun 2021 2:05 PM GMT (Updated: 6 Jun 2021 2:05 PM GMT)

மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்பு வாரிய தேர்வு பற்றி முடிவு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்தது.  மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், 12ம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டன.  தமிழகம், இமாசல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், நடப்பு ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு வரிய தேர்வுகளை நடத்துவது பற்றி நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.

பெற்றோர், பொதுமக்கள், நிபுணர்கள், சமூகத்தினர் மற்றும் மாணவ மாணவியர் தஙகளது பார்வைகளை முன்வைக்கலாம்.  இந்த விவகாரத்தில், pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, wbssed@gmail.com ஆகிய இ-மெயில் முகவரிகளுக்கு நீங்கள் தகவல்களை அனுப்பி வைக்கலாம் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.  எங்களுடைய மாணவ மாணவியரின் வருங்காலமே எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.


Next Story