சிவசேனாவுடன் கூட்டணியா? கூண்டில் அடைபட்ட புலியுடன் எங்களுக்கு நட்பு தேவையில்லை; பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு


சிவசேனாவுடன் கூட்டணியா? கூண்டில் அடைபட்ட புலியுடன் எங்களுக்கு நட்பு தேவையில்லை; பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தாக்கு
x
தினத்தந்தி 10 Jun 2021 9:23 PM GMT (Updated: 10 Jun 2021 9:23 PM GMT)

சிவசேனாவுடன் கூட்டணியா? என்பதற்கு, கூண்டில் அடைபட்டுள்ள புலியுடன் எங்களுக்கு நட்பு தேவையில்லை என பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

புலிகளுடன் நட்பு
மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு பா.ஜனதா, சிவசேனா கூட்டணி பிரிந்தது. இந்தநிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசியது அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் சிவசேனா, பா.ஜனதா இடையே மீண்டும் பழைய உறவு துளிர்விடுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டி ஒன்றில் புலியுடன்(சிவசேனாவின் அடையாளம்) நட்பு கொள்ள விரும்புவதாக கூறினார். இது சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ந்தது.

இந்தநிலையில் சந்திரகாந்த் பாட்டீலின் பிறந்த நாளான நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

கூண்டில் அடைப்பட்ட புலி
எனக்கு சமீபத்தில் ஒருவரிடம் இருந்து புலி புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்று பரிசாக கிடைத்தது. இதை பரிசளித்தவரிடம் இது நல்ல பரிசு என்றும் ‘நாங்கள் எப்போதும் புலிகளுடன் நண்பர்கள்’ என்றும் கூறினேன். இருப்பினும் 
புலி அவர்களின் (சிவசேனாவின்) அடையாளம் என்பதால் ஊடகங்கள் சிவசேனாவுடன் இணைத்து பார்த்துவிட்டனர். நாங்கள் எப்போதும் அனைவருடன் நட்பு பாராட்ட விரும்புகிறோம் என்பது உண்மை தான். ஆனால் நாங்கள் காட்டில் உள்ள ஒரு புலியுடனான நட்பையே விரும்புகிறோம். கூண்டில் அடைபட்டுள்ள புலியுடன் இல்லை. நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தல்களில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். மற்ற கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்று சவால் விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story