உத்தர பிரதேசத்தில் மாநில செயலக அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
உத்தர பிரதேசத்தில் பல ஆண்டுகளாக மாநில செயலக அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிருந்தாவன் பகுதியில் வசித்து வருபவர் ஹிமான்சு சுக்லா. பி.டெக் படித்தவரான இவர் தொடக்கத்தில் சில நிறுவனங்களில் பணிபுரிந்து வந்துள்ளார். இதன்பின் இவருக்கு மாநில செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் செயலகத்தில் பணிபுரியும் சந்தர்ப்பம் அமைந்தது. 2 ஆண்டுகளில் அவருக்கு பலரது அறிமுகம் கிடைத்தது. செயலக அதிகாரி என தன்னை காட்டி கொண்டு மக்களை ஏமாற்றி பணம் ஈட்டலாம் என அவருக்கு யோசனை உதித்து உள்ளது.
இதன்படி, தனது போலியான அடையாளம் வழியே மண்டல அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து சட்டவிரோத வகையில் பணிகளை முடித்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, மொபைல் போன் ஒன்று, போலியான நியமன கடிதம் ஒன்று, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ரூ.1,100 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story