39 மனைவிகள், 94 பிள்ளைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள பக்தாங் கிராமத்தில் வசித்து வந்தவர் சியோங்ககா அகா சியோன்-அ.
இவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரன்-பேத்திகள் உள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகவும், இந்த மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக சியோங்ககா அகா சியோன்-அவும் இருந்தார். 76 வயதான இவருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருந்தன.இதனால் கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சியோங்ககாவின் வம்சாவளியில் ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவர் பல பெண்களை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.சியோங்ககாவின் மரணத்துக்கு மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் லால்தன்வாலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.