வன்முறை தாக்குதலை தடுக்க சட்டம் வேண்டும்; நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் போராட்டம்


வன்முறை தாக்குதலை தடுக்க சட்டம் வேண்டும்; நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2021 6:35 AM GMT (Updated: 18 Jun 2021 6:35 AM GMT)

வன்முறை தாக்குதலில் இருந்து காக்க மத்திய அரசு சட்டமியற்ற கோரி டாக்டர்களின் நாடு தழுவிய போராட்டம் நடந்து வருகிறது.



புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன், உபகரணம், மருந்து உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை காணப்படுகிறது.

இதுதவிர, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது.  கொரோனா 2வது அலையில் நிலைமை இன்னும் மோசமடைந்தது.  அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்படுகின்றன.  கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் போதிய பாதுகாப்பு இன்றி பணிபுரியும் சூழல் காணப்படுகிறது.

டாக்டர்கள் மீது மருத்துவமனையின் உள்ளேயும், வெளியேயும் நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்தும் சூழல் உள்ளது.  இந்நிலையில், டாக்டர்களின் பணி பாதுகாப்பு கோரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று நாடு முழுவதும் 3.5 லட்சம் டாக்டர்களை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக கருப்பு வண்ண பட்டைகள், முக கவசங்கள், ரிப்பன்கள் மற்றும் மேல்சட்டைகளை அணியும்படி அனைத்து மாநில மற்றும் உள்ளூர் கிளை அமைப்புகளிடமும் கேட்டு கொண்டுள்ளது.

இதுபற்றி அந்த கூட்டமைப்பின் தலைவர் கூறும்பொழுது, வன்முறை தாக்குதலில் இருந்து டாக்டர்களை பாதுகாக்க மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.  டாக்டர்களுக்கு தீங்கு இழைக்கும் எவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.


Next Story