கர்நாடகாவில் சிறை கைதி மிரட்டல் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு: விசாரணைக்கு உத்தரவு


கர்நாடகாவில் சிறை கைதி மிரட்டல் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு:  விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jun 2021 2:07 AM GMT (Updated: 22 Jun 2021 2:43 AM GMT)

கர்நாடகாவில் சிறை கைதி மிரட்டல் என்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டை தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


பெங்களூரு,

கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட், சில நாட்களுக்கு முன், உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் டிஜி.பி., பிரவீன் சூட் ஆகியோரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், பணமோசடி வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள கைதி யுவராஜ் சுவாமி, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இது தொடர்பாக, கப்பன் பூங்கா ஏ.சி.பி., யதிராஜ் தலைமையிலான குழுவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.  தொடர்ந்து எம்.எல்.ஏ. அரவிந்துக்கு வந்த மொபைல் எண் இருப்பிடம் பற்றி கண்டறிந்தனர்.  அது பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை காட்டியுள்ளது. இதன் அடிப்படையில், விசாரணை நடக்கிறது.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சிறையிலுள்ள விசாரணை கைதி ஒருவருக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி கிடைத்திருப்பது, ஊழியர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  ஒருவேளை பாதுகாப்பு ஊழியர்களுக்கு தெரியாமல் விசாரணை கைதி யுவராஜுக்கு, மொபைல் கொடுத்த சிறை ஊழியர் பணியை இழக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story