என் மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்... யாரும் ஒட்டு கேட்க முடியாது - மம்தா பானர்ஜி அதிரடி.!


என்  மொபைல் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்... யாரும் ஒட்டு கேட்க முடியாது - மம்தா பானர்ஜி அதிரடி.!
x
தினத்தந்தி 22 July 2021 5:00 AM GMT (Updated: 22 July 2021 5:00 AM GMT)

மத்திய அரசை அடக்கி வைக்கவில்லை என்றால் , நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பா.ஜ.க தரைமட்டமாக்கியுள்ளது என மம்தா பானர்ஜி கூறினார். .

கொல்கத்தா
 தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நேற்று  நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி  உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல்-மந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் மொபைலில்  பொருத்தியுள்ளார்கள்.

செல்போன் ஆடியோ வீடியோ மூலமாக ஒட்டுக் கேட்கப்படுவதால் எனது செல்போனின் கேமராவை டேப் போட்டு மூடி வைத்திருக்கிறேன் என  தனது போனை உயர்த்திக் காட்டியபடி கூறினார்

தொடர்ந்து பேசும் போது மத்திய அரசை அடக்கி வைக்கவில்லை என்றால் , நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது.

ஜனநாயகத்தையும் நாட்டையும் சுப்ரீம் கோர்ட்  காப்பாற்ற வேண்டும். அனைவரின் மொபைலும்  வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் என கூறினார்.

Next Story