மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு 800 பாலங்கள், 290 சாலைகள் சேதம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 July 2021 8:28 PM GMT (Updated: 26 July 2021 8:28 PM GMT)

மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 800 பாலங்கள், 290 சாலைகள் சேதம் அடைந்தன.

மும்பை, 
மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 192ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 800 பாலங்கள், 290 சாலைகள் சேதம் அடைந்தன. 
மழை வெள்ளம்
மராட்டியத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன.
மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர். 
முதல்-மந்திரி ஆலோசனை
இந்த வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. இதனால் மக்கள் தீராத சோகத்தை அனுபவித்து வருகின்றனர். 
இந்தநிலையில் வெள்ளப்பாதிப்பு குறித்து நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பலி 192 ஆக உயர்வு
வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்து உள்ளது. 56 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  
வெள்ள பாதிப்புக்குரிய இடத்தில் இருந்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 74 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
வெள்ளம் காரணமாக 290 சாலைகளை சீர் செய்ய வேண்டியது உள்ளது. 490 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. 800 பாலங்கள் சேதம் அடைந்து உள்ளன. 
மின் இணைப்பு துண்டிப்பு
14 ஆயிரத்து 737 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்து உள்ளன. 9 லட்சத்து 59 ஆயிரம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் 6 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 746 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தகவலை முதல்-மந்திரியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வெள்ளப்பாதிப்பு மற்றும் தேவைப்படும் நிதியுதவி குறித்து முழுமையான தகவல்களை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். மேலும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டு உள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மிக விரைவாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story