மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து நிதின் கட்காரியிடம் பேசுவேன்: மராட்டிய துணை முதல்-மந்திரி


மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து நிதின் கட்காரியிடம் பேசுவேன்: மராட்டிய துணை முதல்-மந்திரி
x
தினத்தந்தி 27 July 2021 8:09 PM GMT (Updated: 27 July 2021 8:09 PM GMT)

கோலாப்பூரில் உள்ள மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் பேசுவேன் என அஜித்பவார் கூறியுள்ளார்.

மேம்பாலங்கள்
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மாவட்டத்தில் நேற்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆய்வு செய்தார். அப்போது அவர் கோலாப்பூரில் மும்பை- பெங்களூரு சாலை வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் (பிளை ஒவர்) கட்டுவது குறித்து மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியுடன் பேசுவேன் என கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் நிதின் கட்காரியுடன் பேசுவேன். தேசிய நெடுஞ்சாலை கண்டிப்பாக எந்த நேரமும் வாகனங்கள் செல்லும் வகையில் இருக்க வேண்டும். எனவே வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் கோலாப்பூரில் உள்ள மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டுவதில் உள்ள சாத்திய கூறுகள் குறித்து நிதின் கட்காரியுடன் பேசுவேன்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
இதேபோல நீர்நிலைகள், மழைநீர் கால்வாய்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தான் வெள்ளம் ஏற்பட காரணம் என என்னிடம் பலர் புகார் அளித்து உள்ளனர். எனவே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளேன். ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறினால், அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன். மாநிலத்தில் நிலச்சரிவால் ஏற்படும் விபத்துகளை குறைக்க நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வல்லுநர்கள் கமிட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோலாப்பூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த வியாழன் முதல் மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சுமார் 2 ஆயிரம் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடகா செல்ல முடியாமல் சிக்கி இருந்தது. இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

Next Story