புதுச்சேரியில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பு; முக்கிய உத்தரவுகள் வெளியீடு


புதுச்சேரியில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பு; முக்கிய உத்தரவுகள் வெளியீடு
x
தினத்தந்தி 28 Aug 2021 8:38 AM GMT (Updated: 28 Aug 2021 8:38 AM GMT)

புதுச்சேரியில் வருகிற செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பினையொட்டி முக்கிய உத்தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.


புதுச்சேரி,

புதுச்சேரியில் வருகிற செப்டம்பர் 1ந்தேதி அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.  இதனை முன்னிட்டு தூய்மை பணிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனினும், ஆட்சியர் அனுமதி வரும் வரை பள்ளி பேருந்துகள் இயக்கப்படாது. அடுத்த உத்தரவு வரும் வரை மதிய உணவு வழங்கப்படாது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் அரசு, அரசு நிதியுதவி பெறும், தனியார், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்காக வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் வகுப்புகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  அதில்,

* பள்ளிகளில் மாணவர் வருகைக்காக ஆகஸ்டு 30ந்தேதி திறந்து முன்னேற்பாடுகளை செய்யலாம். பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை, அரை நாள் மட்டுமே செயல்படும். 9, 11ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படும். அதேபோல் 10, 12ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயங்கும். 
தேவைப்படுவோர் அருகாமையிலுள்ள அரசு பள்ளியை அணுகி, சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று கொள்ளலாம்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி பேருந்துகள் ஆட்சியர் அனுமதிக்கு பிறகே இயக்கப்படும்.

* கொரோனா தொற்றோ அல்லது அறிகுறியோ உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப கூடாது. அதேபோல் வீட்டில் யாருக்கேனும் தொற்றோ, அறிகுறியோ இருந்தாலும் அக்குழந்தையை பள்ளிக்கு அனுப்ப கூடாது.

* பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பள்ளி தரப்பு அழைத்து செல்ல வேண்டும். இந்த நடைமுறையை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* ஆகஸ்டு 30, 31 ஆகிய தேதிகளில் பள்ளிகளை தூய்மைப்படுத்துதல், சமூக இடைவெளியுடன் குழந்தைகளை அமர வைக்க முன்னேற்பாடு ஆகியவற்றை செய்யவேண்டும்.

* பள்ளியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நுழையும் முன்பு கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு தூய்மை செய்தே அனுமதிக்க வேண்டும்.

* தினமும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து, பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும்.

* கழிப்பறை, கை கழுவும் இடம் ஆகியவற்றில் இடைவெளி, தூய்மையை பராமரிக்க வேண்டும்.

* வருகை பதிவேடு கட்டாயமில்லை. பள்ளி வராதோருக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்.

* அடுத்த உத்தரவு வரும் வரை மதிய உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story