நீதித்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


நீதித்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 11 Sep 2021 7:16 PM GMT (Updated: 11 Sep 2021 7:16 PM GMT)

நீதித்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.

அடிக்கல் நாட்டு விழா
உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாராஜில் உத்தரபிரதேச சட்ட பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட்டு கட்டிடங்கள் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இவற்றுக்கான அடிக்கல்லை நாட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

பெண்களுக்கு அதிக புரிதல்

அப்போது அவர் கூறியதாவது:- 

பெண்களுக்கு நீதியைப் பற்றிய புரிதல் மிக அதிக அளவில் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் நீதி வழங்குகிற விருப்பத்தைக் கொண்டுள்ளனர்.எனவே நீதித்துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் மாமியார், மாமனார், பெற்றோர், கணவர், மகன் என அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்கள் திறனை நிரூபிக்கின்றனர்.தற்போது நாட்டின் தலைமை நீதிபதியாக பெண் பதவி ஏற்பதற்கான பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

‘நீதி எளிதாக கிடைக்க வேண்டும்’
அனைவருக்கும் எளிதான வகையில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு நீதி எளிதாக கிடைக்க வேண்டும்.பொதுமக்களுக்கு நீதித்துறை மீதான ஆர்வம் பெருக வேண்டும். நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரித்து, வழக்குகளில் விரைவான முடிவுகளை கொண்டு வர வேண்டும். நீதித்துறைக்கு போதுமான வளங்கள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story