நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி


நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
x
தினத்தந்தி 7 Oct 2021 5:55 PM GMT (Updated: 7 Oct 2021 5:55 PM GMT)

நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, வெளி நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான  நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது, தடுப்பூசியின் தேவை அதிகரித்தது. எனவே, மார்ச் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. 

அதன்பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அதேசமயம் தடுப்பூசி உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில், 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி இன்று வழங்கியுள்ளது.

அதைபோல ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Next Story