விவசாயிகள் போராட்ட வன்முறை: மத்திய மந்திரியின் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்


விவசாயிகள் போராட்ட வன்முறை: மத்திய மந்திரியின் மகனுக்கு  14 நாள் நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 10 Oct 2021 6:37 AM GMT (Updated: 10 Oct 2021 6:37 AM GMT)

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்ட வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று கைது செய்யப்பட்டார்.

லகிம்பூர் கேரி, 

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் பலியாகினர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். 

இந்தக் குற்றச்சாட்டை மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மறுத்த நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பினர். அந்த சம்மன், அஜய் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, லகிம்பூர் கேரி போலீஸ் லைனில் உள்ள குற்றவியல் பிரிவு சிறப்பு விசாரணைக் குழுவின் முன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று காலை 10.35 மணிக்கு ஆஜரானார். 12 மணி அஜய் மிஸ்ராவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்தனர். இதையடுத்து, நேற்று(சனிக்கிழமை) இரவு அஜய் மிஸ்ரா நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அஜய் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

அஜய் மிஸ்ராவை ரிமாண்ட் செய்யும் போலீசாரின் மனுவை, திங்கள் கிழமை காலை 11 மணிக்கு  நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக  மூத்த வழக்கறிஞர் எஸ்.பி யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 


Next Story