உங்கள் சகோதரி போன்றவள் நான்: தொண்டர்கள் முன் மம்தா பானர்ஜி பேச்சு
கோவாவில் தொண்டர்கள் முன் பேசிய மம்தா பானர்ஜி உங்கள் சகோதரி போன்றவள் நான் என கூறியுள்ளார்.
பனாஜி,
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரியான மம்தா பானர்ஜி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் மீனவ சமூக மக்களை சந்தித்து பேச இருக்கிறார். இதன்படி, முதலில் டோனா பவுலா பகுதியில் உள்ள சர்வதேச மையத்தில் இன்று காலை 10 மணியளவில் கோவா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதியம் 12 மணியளவில் பெடிம் பகுதியில் மீனவ மக்களுடன் அவர் உரையாடுகிறார். இதன்பின்பு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகிறார்.
அவர் தொண்டர்கள் முன்னிலையில் இன்று பேசும்போது, நான் உங்கள் சகோதரி போன்றவள். உங்கள் அதிகாரங்களை கைப்பற்ற நான் இங்கு வரவில்லை. மக்கள் சங்கடங்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு நாம் உதவ முடியுமா? என்பது எனது நெஞ்சை தொட்டது.
நீங்கள் உங்களுடைய பணியை செய்வீர்கள். அந்த பணியில் உங்களுக்கு நாங்கள் உதவியாக இருப்போம். வங்காளம் போன்று வருங்காலத்தில் கோவாவும் வலிமையாக மாற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். கோவாவின் புதிய விடியலை காண நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story