‘பிரியங்கா காந்தி ஒரு புயல்’ - உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு
பிரியங்கா காந்தி ஒரு புயல் என்று உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில கட்சி பொறுப்பாளருமான பிரியங்கா, சூறாவளியாக சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரியங்காவின் இந்த நடவடிக்கைகளை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘உத்தரபிரதேசத்தில் ஒரு புயல் அடித்து வருகிறது. அதன் பெயர் பிரியங்கா காந்தி. இது வருகிற தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க உதவும். உத்தரபிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகளை பிரியங்கா காந்தி எழுப்பி வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அரசும் அவரால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளரை கட்சித்தலைமை முடிவு செய்யும். ஆனால் பிரியங்கா தலைமையில்தான் தேர்தலை சந்திக்க உள்ளோம். இதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்’ என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story