தூய்மை நகரம்; 5-வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்
தூய்மையான மாநிலத்திற்கான விருதை சத்தீஷ்கர் பெற்றுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இதற்கான விருதை வழங்கினார்.
புதுடெல்லி,
தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நகரங்களில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017 முதல் 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் முதலிடத்தை இந்தூர் பிடித்தது. இதற்கான விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
தூய்மையான நகரங்கள் பட்டியலில் சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது டெல்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா, உஜ்ஜைன் ஆகிய நகரங்கள் முறையே அடுத்தத்த இடத்தில் உள்ளன. 25 நகரங்கள் கொண்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் லக்னோ 25- வது இடத்தில் உள்ளது. தூய்மையான மாநிலத்திற்கான விருதை சத்தீஷ்கர் தட்டிச்சென்றுள்ளது.
Related Tags :
Next Story