குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிப்பது தான் மத்திய அரசின் திட்டம்: சித்து குற்றச்சாட்டு


குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிப்பது தான் மத்திய அரசின் திட்டம்: சித்து குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Nov 2021 11:56 AM GMT (Updated: 21 Nov 2021 3:43 PM GMT)

குறைந்தபட்ச ஆதார விலையை ஒழிப்பதுதான் மத்திய அரசின் திட்டம் என பஞ்சாப் முதல் மந்திரி சித்து விமர்சித்துள்ளார்.

அமிர்தசரஸ்,

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு 3 திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டாக போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற உள்ளதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். 

மத்திய அரசின் இந்த முடிவை விவசாய அமைப்புகள் வரவேற்று உள்ளன. அதேநேரம் மேற்படி 3 சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் முறைப்படி திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டத்தை தொடரப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், வேளாண் மசோதாவை விட குறைந்த பட்ச ஆதரவு விலை விவகாரம் தான் முக்கிய பிரச்சினை என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தெரிவித்துள்ளார். சித்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது-

 'மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான வெற்றியை நினைத்து இன்று மகிழ்ந்தாலும், நம்முடைய உண்மையான பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் கபட திட்டம் என்னவென்றால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு, வேளாண் பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதுதான்.

 இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த உத்தரவாதமும் மத்திய அரசிடம் இல்லை. கொள்முதல், பொருட்களை சேமித்து வைத்தல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் தனியார் கார்பரேட்டுகளுக்கு இடம் அளிக்கும் மத்திய அரசின் வடிவம் இன்னும் நீடித்து கொண்டிஉக்கிறது. 

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து ஒருவார்த்தை கூட வரவில்லை. நாம் ஜூன் 2020- நிலைக்கு திரும்பியுள்ளோம்.  கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துவதில் இருந்து தங்களை பாதுக்காக்க சிறு விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசின் ஆதரவு தேவைப்படுகிறது.  பஞ்சாப் மாடல் மட்டும்தான் ஒரே வழி” எந்த் தெரிவித்துள்ளார். 

Next Story