3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்


3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:04 AM GMT (Updated: 29 Nov 2021 9:29 AM GMT)

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

புதுடெல்லி,

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.

 எனினும், வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து விவசாயிகள்,  டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பாராளுமன்றத்தில் இன்று வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதலில் மக்களவையில்  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட ரத்து மசோதா  நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியது.  பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட ரத்து மசோதா, இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.


Next Story